முகப்பு
இந்தியா

பிரதமர் பேசாமல்..! குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி...

Updated On : 5 பிப்ரவரி 2026, 12:38 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - ANI
பகிர்:

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக 2004 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisement

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலையும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றியுள்ளார்.

தொடர்ந்து பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றவுள்ளார்.

2004-ல் என்ன நடந்தது?

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசத் தொடங்கியபோது, பாஜக எம்பிக்களின் அமளியால் அவர் பேசாமலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், மார்ச் 10, 2005 அன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மன்மோகன் சிங் பேசத் தொடங்கும்போது, முந்தைய ஆண்டு நிகழ்வைக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பான காணொலியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

summary

The motion of thanks to the President's address was passed.

2004-ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிப்பதைத் பாஜக தடுத்தது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தகவல் தொடர்புப் பிரிவு) ஜெய்ராம் ரமேஷ், மார்ச் 10, 2005 அன்று சிங் ஆற்றிய உரையின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில், முன்னாள் பிரதமர், ஜூன் 10, 2004 அன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க அனுமதிக்கப்படாத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

2005 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தனது உரையை பின்வருமாறு தொடங்கினார்:

“மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றிய மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எங்கள் அரசாங்கத்தின் நன்றியைத் தெரிவிப்பதற்காக இன்று இங்கு நிற்பதை நான் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

ஐயா, இந்த மகிழ்ச்சியான பணியைச் செய்வதற்காக நான் ஓராண்டு காலம் முழுதும் காத்திருக்க வேண்டியிருந்ததால், இது எனக்குக் கடினமாகப் பெறப்பட்ட ஒரு பாக்கியமாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் அவர்களுக்கு—கடந்த ஆண்டு ஆற்றிய உரைக்காகவும், இந்த ஆண்டு ஆற்றிய உரைக்காகவும்—மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.