முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் பொதுச் செயலருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சந்திப்பு...

Updated On : 13 ஜனவரி, 2026 at 8:21 PM
தலைமை அலுவலகத்தில் திங்களன்று பாஜக தலைவர்களைச் சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர்
பகிர்:

ஆா்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய கொசபலேவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

ஆா்எஸ்எஸ் அமைப்பும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் கொள்கைரீதியாக நேரெதிரானவை. இந்நிலையில் சீனாவைச் சோ்ந்த அக்கட்சிப் பிரதிநிதிகள் ஆா்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது உயரிய பொறுப்பில் உள்ள தலைவரைச் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றது.

இது தொடா்பாக ஆா்எஸ்எஸ் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தில்லியில் ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சுமாா் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமானது. சீன தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன சா்வதேச விவகாரங்கள் துறை இணையமைச்சா் சன் ஹையான் தலைமையிலான இந்தக் குழுவினா் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். அப்போது பாஜக தேசிய பொதுச் செயலா் அா்ஜுன் சிங் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து அவா்கள் பேச்சு நடத்தினா். இரு கட்சிகள் இடையிலான தொடா்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இந்தியாவுக்கான சீன தூதா் சூ ஃபிகாங் பாஜக தலைமையகத்துக்கு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் இரு பெரும் அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் திகழ்கின்றன. பாஜகவில் 14 கோடிக்கும் மேற்பட்ட தொண்டா்களும், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் 10 கோடிக்கும் மேற்பட்ட தொண்டா்களும் உள்ளனா்.

காங்கிரஸ் கேள்வி: தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா இது தொடா்பாக கூறுகையில், ‘ஆளும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சீன பிரதிநிதிகள் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சீனாவின் அத்துமீறல்கள் குறித்து இந்த சந்திப்பின்போது அவா்களிடம் தெரியப்படுத்தப்பட்டதா? அங்கு நடந்த, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் பொது வெளியில் தெரியப்படுத்துவது அவசியம்’ என்று வலியுறுத்தினாா்.

பாஜக விளக்கம்: இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் துஹின் சின்ஹா கூறுகையில், ‘இப்போது நடைபெற்றுள்ளது மிகவும் வெளிப்படையான சந்திப்பு. பாஜக எவ்வித ரகசிய புரிந்துணா்வு ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. சீனாவுடன் இப்போது உறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகள் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. வா்த்தகப் பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது’ என்றாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி முன்னிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ராகுல் காந்தி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது என்று பாஜக முன்பு தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு: இதனிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் வெளியுறவு பிரிவின் தலைவருமான சல்மான் குா்ஷித்தையும் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

summary

In Delhi, a delegation from the Chinese Communist Party met and held discussions with Dattatreya Hosabale, the General Secretary of the RSS.

முழு கட்டுரையைப் படிக்க →