முகப்பு
இந்தியா

முதல்வர் மாளிகையில் தங்க மறுக்கும் டி.கே. சிவக்குமார்! துரதிருஷ்ட முத்திரை குத்தப்பட்ட கதை

கர்நாடக முதல்வர் மாளிகையில் டி.கே. சிவக்குமார் தங்க மறுப்பதற்கு, துரதிருஷ்ட முத்திரை குத்தப்பட்டதுதான் காரணமா?

Updated On : 1 ஜூலை 2026, 6:09 pm IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் - X
பகிர்:

கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே. சிவகுமார், தனக்கென பிரத்யேமாக வீடு தேடி அலைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏன், கர்நாடகத்தில் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு சில மாநிலங்களில் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் இல்லாததால், புதிய முதல்வர்கள் பொறுப்பேற்கும்போதெல்லாம் அவர்களுக்கான வசதியுடன், நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்க தனி அலுவலகம் செயல்படுதற்கான வாய்ப்புகளுடன் வீடு தேடும் படலம் மிகப்பெரிய சவாலாக மாறிவிடும்.

ஆனால், கர்நாடகத்தில், அதிகாரப்பூர்வ முதல்வர் மாளிகை அனுக்கிரகம் இருப்பதாகவும், அதன் மீது சில பழமைவாத நம்பிக்கைகள் காரணமாக, யாரும் அதில் தங்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கடவுளின் அல்லது நேர்மறை ஆற்றலைப் பெற்ற என்ற பொருள்படும் அனுக்கிரகா என்ற அந்த மாளிகை கிட்டத்தட்ட 60 ஆயிரம் சதுர அடிப் பரப்பரளவில் அமைந்துள்ளது. எனினும், முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல், கர்நாடக முதல்வராக இருந்த யாரும் அந்த பங்களாவில் தங்க விரும்பவில்லை.

காரணம், அந்த அனுக்கிரகா பங்களாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை, அது நல்வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை என்று மக்களால் நம்பப்படுகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த தேவே கௌடா, பிரதமர் பதவியை ஏற்கும் வகையில், முதல்வர் பதவியை பாதியில் ராஜிநாமா செய்துவிட்டுச் சென்றார். அதன்பிறகு தரம்சிங் முதல்வரானார். ஆனால், அவரும் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி முறிந்ததால் பதவியை இழந்தார்.

எச்.டி. குமாரசாமி - பாஜகவுடன் இணைந்து பதவியை பங்கிட்டுக் கொள்ளும் ஆட்சித் திட்டமும் நிறைவேறவில்லை. கர்நாடக முதல்வராக கிருஷ்ணா மட்டுமே ஐந்து ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால், 2004ஆம் ஆண்டு அவரது காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

தொடர்ந்து இதுபோன்ற கெடுபயன்களை அளித்து வந்ததாகக் கூறப்படும் மாளிகையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி சிலப் பணிகளை மேற்கொண்டார். 2006 - 07ஆம் ஆண்டில் வாஸ்துப்படி சில திருத்தங்களை செய்தார். அந்த வீட்டில் இரண்டு பசுமாடுகளை வளர்த்தால், அங்கிருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என ஜோதிடர்கள் கொடுத்த ஆலோசனையையும் செய்து பார்த்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. அவரும் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

கடைசியாக 2011ஆம் ஆண்டு சதானந்தா கௌடாதான் அந்த மாளிகையில் தங்கியிருந்தவராம். அவரும் தன்னுடைய பதவியை பூர்த்தி செய்யவில்லை. எனவே, அங்கு குடியேறும் எந்த முதல்வரும், கர்நாடகத்தில் முழு பதவிக் காலத்தையும் நீடிக்கவில்லை, அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகவில்லை என்ற நம்பிக்கையே இப்போது வரை அது காலியாக இருக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிவகுமார் வீடு தேடி வருகிறார். அதிலும் குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதல்வருக்கு வீடு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதானதும் அல்ல என்பதை பலரும் அறிவர்.

கர்நாடகத்தில், விதான் சௌதாவை சுற்றிலும் சில சின்ன சின்ன பங்களா வீடுகளை அரசு நிர்வகித்து வருகிறது. அதில் ஒன்றைத்தான் சிவக்குமார் தேர்வு செய்ய வேண்டும். தற்போது 160 ஆண்டுகள் பழமையான குமார க்ருபா என்ற பங்களாவைத்தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். இதனை பொதுப் பணித் துறையினர் சீரமைத்து வருகிறார்கள்.

ஏற்கனவே, கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா ஏற்கனவே வசித்து வந்த காவேரி பங்களாவில் தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் முதல்வர்களாகப் பதவியேற்போர், பல்வேறு காரணங்களால் பதவியை முழுமையாகத் தொடர முடியாமல் போகிறது, அதற்கு முழுக்க முழுக்க அரசியல்தான் பின்னணியாக இருக்கும் நிலையில், அனைத்துக்கும் அனுக்கிரகத்தின் மீது பழிபோடப்பட்டிருக்கிறது என்பதே கர்நாடக மக்களின் கருத்தாக உள்ளது.

summary

Shivakumar Refuses to Stay at the CM Residence Story Behind Jinxed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments