எரிந்த உடல்; தடயம் பூஜ்ஜியம்! காட்டிக் கொடுத்த அப்பள பாக்கெட்!
அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த உடல், தடயமே இல்லாத நிலையில், அப்பள பாக்கெட் கொண்து துப்பு துலங்கிய போலீஸ்
ஆந்திர மாநிலம் ஆனந்தாபூர் பகுதியில், எரிந்த உடல் மட்டும் கிடைத்த சம்பவத்தில், ஒரு தடயமும் இல்லாத நிலையில்,ஒரே ஒரு அப்பளப் பாக்கெட்டை வைத்து காவல்துறை துப்பு துலக்கியிருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ராயதுர்காம் காவல்துறைக்கு, மிகப்பெரிய சவாலாக மாறியிருந்தது ஒரு கொலை வழக்கு. வெறும் எரிந்த உடல், அடையாளம் தெரியாமல் கிடைத்த நிலையில், வேறு எந்த தடயமும் இல்லாமல், ஒரு வழக்குத் தொடங்கியது. ஆனால், ஒரே ஒரு அப்பள பாக்கெட் கொண்டு, குற்றத்தில் துப்பு துலங்கப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணத்துக்காக ஒருவரைக் கொலை செய்து, அவரது அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக உடலை எரித்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த வழக்குத் தொடங்கியது ஜூன் 23ஆம் தேதி. விவசாய நிலத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டது.
அங்கு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களோ, சிசிடிவி காட்சிகளோ பெரிய அளவில் கிடைக்கவில்லை. வெறும் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில்தான் துப்பு துலங்க வேண்டிய நிலை.
சம்பவம் நடந்த இடத்தில், பாதி எரிந்த நிலையில் ஒரு கன்னட நாளிதழ், எரிந்த துணிகளுடன் அப்பளம் பாக்கெட் இருந்துள்ளது. விசாரணைக்கு இந்த அப்பளம் பாக்கெட்தான் பேருதவி செய்திருக்கிறது.
இந்த அப்பளம் பாக்கெட் எங்கு தயாரிக்கப்படுகிறது என்று விசாரித்த போது, அது சென்னையில் என்பதும், அங்கிருந்து பல்லாரிக்கு விநியோகிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, காது, வாய் மாற்றுத்திறனாளியான குருராஜூ ராவ் என்ற அப்பள வியாபாரி, சில நாள்களாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது கொலை செய்யப்பட்டது குருராஜூ என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டு மூலம் பணமெடுக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. அந்த ஏடிஎம் மையம் சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், ஏடிஎம்மில் பணமெடுத்தவர் அடையாளம் காணப்பட்டார். பிறகு தொழில்நுட்ப ரீதியாக குற்றவாளியின் செல்போன் எண் கண்டுபிடிக்கப்பட்டு அதில் பதிவான தகவல்களைக் கொண்டு இரண்டாவது குற்றவாளியும் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்டவரிடம் அதிகம் பணம் இருக்கும் என்று நினைத்து அவரை தனியாக ஓரிடத்துக்கு வரவழைத்து கொலை செய்து, வண்டி, செல்போன், ஏடிஎம் கார்டுகளை அபகரித்துக்கொண்டு உடலை எரித்தது தெரிய வந்தது.
குற்றவாளிகளும் காது, வாய் மாற்றுத்திறனாளிகள் என்பதால், சைகை மொழியில் பேசுபவர்களின் உதவியோடு விசாரணை தொடர்ந்து வருகிறது.
Burnt body; zero clues! The papad packet that gave it away!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.