முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடிகளை வெளிப்படுத்திய மாணவருடன் ராகுல் சந்திப்பு!

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடிகளை வெளிப்படுத்திய மாணவருடன் ராகுல் சந்திப்பு!

Updated On : 3 ஜூன் 2026, 3:56 pm IST
மாணவர் சார்தக் சித்தாந்த் - ராகுல் காந்தி எம்.பி. - X image
பகிர்:

சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடிகளுக்குக் காரணமாக இருந்த டெண்டர் திருத்தங்கள் பற்றி வெளிப்படுத்திய 17 வயது மாணவர் சார்தக் சித்தாந்த்-ஐ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்க ஒப்பந்தப் புள்ளி கோரிய நடைமுறையில் இருந்த முரண்பாடுகள் குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் நேரில் விளக்கம் அளித்திருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும் வகையில், சிபிஎஸ்இ தன்னுடைய விதிமுறைகளை தானே திருத்தியிருப்பாதாகவும் மாணவர் குற்றம்சாட்டியிருந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த்-ஐ, ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சிபிஎஸ்இ வெளியிட்ட டெண்டரில் நடந்த மாற்றங்கள் குறித்தும் மாணவரிடம் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் கேட்டறிந்தார். லட்சக்கணக்கானோர் எழுதிய +2 தேர்வை எழுதி பாதிக்கப்பட்ட மாணவர்களில் சார்தக் சித்தாந்தும் ஒருவர்.

மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தபோது, அவருக்கு திரையில் காட்டப்பட்ட விடைத்தாள்களில் ஏதோ சிக்கல் இருப்பதை உணர்ந்து, இந்த சேவையை வழங்கிய நிறுவனம், அதனை தேர்வு செய்யப்பட்ட நடைமுறைகளை அவர் அலசியிருக்கிறார்.

அந்த ஆய்வில் அவருக்குக் கிடைத்த தகவல்களையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

முதன்முதலில் இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட டெண்டர் பொது வெளியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான தகுதிகளை குறிப்பிட்ட கோயம்ப்ட் எஜூடெக் நிறுவனம் பெறும் வகையில் அடுத்தடுத்து மாற்றியமைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்நிலையில், கணினி வழியில் விடைத்தாள்களை திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்கும் நிறுவனங்களை தோ்வு செய்யும் நடைமுறையில் முரண்பாடுகள் இருந்ததாக, ஜாா்க்கண்டை சோ்ந்த 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் பொதுவெளியில் அம்பலப்படுத்தினாா்.

விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடியால் பாதிக்கப்பட்ட அவா், மத்திய அரசின் வலைதளத்தில் கிடைத்த சிபிஎஸ்இ-இன் பல ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதில் கணினி வழியில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான சேவைகளை அளிக்கும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக அமையும் வகையில், பல முரண்பாடுகள் இருந்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

விடைத்தாள் திருத்தம் விவகாரம் குறித்து ஏற்கனவே ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘ஓஎஸ்எம் முறை தொடா்பான ஒப்பந்தத்தை ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் சிபிஎஸ்இ ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனம், ஏற்கெனவே தெலங்கானா மாநில கல்வி வாரிய ஒப்பந்தத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிறுவனமாகும். தெலங்கானாவில் 2019 மற்றும் 2023 பொதுத் தோ்வு வினாத்தாள்களுக்கான ஓஎஸ்எம் ஒப்பந்தத்தில் இந்த நிறுவனம் மோசடி செய்தது. இந்த முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட 23 இளம் தெலங்கானா மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

இந்த மோசடி நிறுவனத்தையே சிபிஎஸ்இ-யும் தற்போது தோ்வு செய்துள்ளது. இந்த நிறுவனம் குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் உள்ளன. இந்த நிறுவனத்தின் பின்னணி குறித்து சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். எனவே, இந்த நிறுவனத்துக்கு சிபிஎஸ்இ ஒப்பந்தம் கொடுத்தது தவறுதலாக நடந்த விஷயமல்ல; மாறாக, திட்டமிட்ட சதி’ என்று ராகுல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.