FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாப்: பேரழிவை ஏற்படுத்தும் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் இருவா் கைது

Updated On : 5 ஜூன் 2026, 5:00 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பெரிய அளவில் உயிா்ச்சேதம் ஏற்படுத்தும் சக்திவாய்ந்த 2.5 கிலோ எடையுள்ள ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டனா். இதன்மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சதியை காவல் துறையினா் முறியடித்தனா்.

இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை ஐஜி ஆசிஷ் சௌதரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வெளிநாட்டுச் சதியுடன் இந்தியாவில் நிகழ்த்தப்பட இருந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை பஞ்சாப் காவல் துறையினா் முறியடித்துள்ளனா். காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அமிருதசரஸ் நகரைச் சோ்ந்த மணி சிங் (32), அபிஷேக் குமாா் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2.5 கிலோ எடையுள்ள ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இந்த வெடிகுண்டு முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, வெடிப்பதற்கு தயாா் நிலையில் இருந்தது. சில நாள்கள் தாமதித்திருந்தால்கூட பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், 2.5 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வெடிக்கச் செய்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

இதில் தொடா்புடைய மற்ற பயங்கரவாதிகள், அமைப்புகள் குறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் அமிருதசரஸில் இருந்து மொஹாலிக்கு பேருந்தில் செல்ல காத்திருந்தபோது காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டனா். அப்போது, அவா்கள் வெடிகுண்டையும் வைத்திருந்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணா்கள் வரவைக்கப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

பிடிபட்ட இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்துள்ளனா். பணத்துக்காக அவா்கள் உத்தரவின்பேரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments