அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்புத் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பற்றி..
அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்க உள்ளது. யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பாதுகாப்பு தொடர்பாக இன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, மத்திய ரிசர்வ் காவல் படைதலைமை இயக்குநர் ஜி.பி. சிங் மற்றும் பிற மூத்த பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலுக்கான 57 நாள் புனிதப் பயணத்திற்குப் பெருமளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுவதால் மத்திய மற்றும் யூனியன் பிரதேச முகமைகள் இணைந்து செயல்படுகின்றன.
Advertisement
Advertisement
பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக, மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பம், உளவுத்துறை சார்ந்த கண்காணிப்பு, பல முகமைகள் ஒருங்கிணைத்துச் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாத்திரைக்கு வரும் பக்தர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான 48 கி.மீ நீளமுள்ள நுன்வான்-பஹ்ல்காம் பாதை வழியாகவும், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்குத்தான 14 கி.மீ நீளமுள்ள பால்தால் பாதை வழியாகவும் பயணம் செய்வார்கள்.
முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், துணைநிலை ஆளுநர் சின்ஹா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மைப் பணிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான சேவைகள் ஆகியவற்றில் சுமுகமான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு பல்வேறு துறைகள் மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
யாத்திரை பாதையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் வகையில், க்யூஆர் குறியீடு அடிப்படையிலான "பஹ்சான் செயலி"யையும் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பான மற்றும் அசம்பாவிதங்கள் இல்லாத புனித யாத்திரையை உறுதிசெய்ய, முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.