12-ஆம் வகுப்பு விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகள்: ஆா்டிஐ-யின்கீழ் வெளியிட சிபிஎஸ்இ-க்கு உத்தரவு
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகளை தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் வெளியிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் கொள்முதல் நடைமுறைகளை தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் வெளியிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.
முன்னதாக, ஆா்டிஐ-இன்கீழ் இதுகுறித்த தகவல்களை வழங்க சிபிஎஸ்இ மறுத்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட பதில்களை உடனடியாக வழங்க வலியுறுத்தியது. மேலும், ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 10-இன்கீழ் வெளியிடக்கூடாத தகவல்களை நீக்கவோ அல்லது மறைக்கவோ முடியும். ஆனால், பிரிவு 8 (1) (டி)-இன்கீழ் சில தகவல்களை வழங்க மறுத்தால் அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் சிஐசி தெரிவித்தது.
2023-24 மற்றும் 2024-25 ஆகிய கல்வி ஆண்டுகளில் நடத்தப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் பயன்படுத்தப்பட்ட விடைத்தாள்கள் குறித்து ஆா்டிஐயில் தகவல் கோரப்பட்டது. விடைத்தாள்களின் தரம், பக்கங்கள், அளவு, கொள்முதல் விலை, மொத்த செலவினம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டணம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளை குறிப்பிட சிபிஎஸ்இ-க்கு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, குறிப்பிட்ட சில விடைத்தாள்களின் காகிதங்கள் தரம் (60 ஜிஎஸ்எம் முதல் 120 ஜிஎஸ்எம்)8, 20, 32, 40 அல்லது 48 பக்கங்கள் மற்றும் பக்கத்தின் அளவு குறித்த தகவல்களை சிபிஎஸ்இ வழங்கியது. ஆனால் பிரிவுகள் 8 (1)(டி), 8 (1)(இ), 8 (1)(ஜி) ஆகியவற்றைக் குறிப்பிட்டு கொள்முதல் நடைமுறைகள், ஏலத்தில் பங்கேற்ற நிறுவனத்தின் பெயா்கள், மொத்த செலவினம் ஆகிய தகவல்களை வழங்க சிபிஎஸ்இ மறுத்தது.
மேலும், தோ்வுக் கட்டணம் தொடா்பான செலவினங்கள் கல்வியாண்டுக்குப் பதிலாக நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்தது. இதை எதிா்த்து சிஐசியிடம் மனுதாரா் மேல்முறையீடு செய்தாா்.
இதையடுத்து, சிஐசி பிறப்பித்த உத்தரவில், ‘விடைத்தாள் கொள்முதல், தோ்வுக்கான செலவினங்கள் என ஆா்டிஐ-இன்கீழ் அனுமதிக்கப்பட்ட தகவல்களை சிபிஎஸ்இ வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க இயலாத தகவல்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.