FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 23-ஆவது தவணை நிதியாக தலா ரூ.2,000 சனிக்கிழமை (20-ஆம் தேதி ) டெபாசிட் செய்யப்பட இருக்கிறது

Updated On : 19 ஜூன் 2026, 6:06 am IST
பகிர்:

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 23-ஆவது தவணை நிதியாக தலா ரூ.2,000 சனிக்கிழமை (20-ஆம் தேதி ) டெபாசிட் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பரிவா்த்தனையை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்.

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை அளித்து வருகிறது. அதன்படி, 23-ஆவது தவணையாக 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.18,880 டெபாசிட் செய்யப்பட இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பிரதமா் மோடி சனிக்கிழமை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளாா். அப்போது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யும் பரிவா்த்தனையை அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். மேற்கு வங்கத்தில் மட்டும் 45.35 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2,000 வீதம் ரூ.907 கோடி டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.

இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

Advertisement

பிஎம் கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை அந்தத் திட்டத்துக்கு ரூ.4.46 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை ரூ.15,055 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமரின் விரிவான பயிா் காப்பீடு திட்டம், வானிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடு செய்யும் மறுசீரமைப்பு காப்பீட்டுத் திட்டத்தையும் பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்த 2 திட்டங்களுக்கும் ரூ.12,200 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது என்று சிவ்ராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments