லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தில்லியில் கைது!
தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பற்றி..
தில்லியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர் கைது.
தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு வேலை பார்த்ததாக சந்தேகத்திற்குரிய நபரை காசிப்பூர் பகுதியில் இன்று கைது செய்தனர்.
ஷபீர் அகமது லோனே என்கிற காஷ்மீரி எனப்படும் அந்த நபர் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஸ்லீப்பர் செல் உறுப்பினராக செயல்பட்டு தில்லியில் இந்தியாவுக்கு எதிரான போஸ்டர்களை பல்வேறு பகுதியில் ஒட்டியதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் புலனாய்வு சேவையகம் (ஐ.எஸ்.ஐ.) -ன் கீழ் இவர் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்திய பணம், சிம்கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.
முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு ஏகே 47 ரைஃபில்கள் அடங்கிய பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் இந்த நபர் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 2018 வரை திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும், இவருக்கு ஹஃபீஸ் சையது மற்றும் ஸகி-உர்-ரெஹ்மான் லக்வி போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபர்பாத்தில் பயங்கரவாத பயிற்சி எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.