ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து!
ராஜ்தானி விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது குறித்து...
ராஜ்தானி விரைவு (12431) ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸின் குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே கோட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
Advertisement
68 பயணிகள் பணித்த பி 1 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அனைத்துப் பயணிகளும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவாமல் இருக்க, தீப்பிடித்த பெட்டி ரயிலிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பயணத்தைத் தொடர தீப்பிடித்த பெட்டியிலிருந்த பயணிகளை மற்ற பெட்டிகளில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்துவரும் கோட்டா ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.