முகப்பு
இந்தியா

நீட் விவகாரம்: கைதானவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர்

நீட் விவகாரத்தில் கைதானவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சர் தெரிவித்தது தொடர்பாக...

மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சத் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான சஞ்சய் ஷிர்சத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரும் பேராசிரியருமான சிவராஜ் மோட்டேகான்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இவர், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு ஒன்பது கிளைகள் உள்ளன. இதன் முக்கிய கிளை லாத்தூரில் அமைந்துள்ளது. இதுவரை தில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புணே, லாத்தூர் மற்றும் அஹ்லியநகர் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சத் தெரிவித்ததாவது:

மிகப்பெரிய அரசியல்வாதிகளால்கூட இவ்வளவு விளம்பரங்களைச் செய்ய முடியாது. ஆனால், சிறு கிராமங்களுக்குச் சென்றால்கூட அங்கு பயிற்சி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கான பணம் மாணவர்களின் கட்டணங்களில் இருந்து வருகிறது. எனவே, இதில் தொடர்புடையவர்களை கைது செய்தால் மட்டும் போதாது. அவர்களின் செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக முக்கியமானது. நீட் வினாத்தாள் கசிவு என்பது சிறிய வழக்கல்ல. அது 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றியது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது எனத் தெரிவித்தார்.

summary

Maharashtra Minister and Shiv Sena leader Sanjay Shirsat stated on Tuesday that buildings owned by those involved in the NEET question paper leak case should be demolished.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.