உ.பி.யில் கல்லூரி மாணவிக்கு காஃபியில் மயக்க மருந்து கலந்தளித்து 3 நாள்கள் வீட்டில் பூட்டி பாலியல் வன்கொடுமை!
மாணவியை 3 நாள்கள் வீட்டில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை!
புது தில்லி : உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவியொருவருக்கு காஃபியில் மயக்க மருந்து கலந்தளித்து அவரை 3 நாள்கள் வீட்டில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்டுள்ள அந்த இளம்பெண், தில்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த நிலையில், அத்துடன் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கடந்த மே 15-இல் அவர் தில்லிக்கு ரயிலில் புறப்பட்டார். அந்தப் பெண் தமது நண்பரும் தூரத்து உறவினருமான ஷிவம் யாதவ் என்பவரை செல்லும் வழியில் வாட்ஸ்ஆப் வழியாகத் தொடர்பு கொண்டு யதார்த்தமாகப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், லக்னௌ நகரிலுள்ள சார்பாக் ரயில் நிலையத்தைச் சென்றடைந்த ரயில் இருந்த அந்தப் பெண்மணியை, ஷிவம் தன்னிச்சையாக சென்று பார்த்து பேசினாராம். அப்போது அவரிடம் இணக்கமாகப் பேசி, தமக்கு நன்கறிந்த ஒரு நண்பரின் வீட்டில் அவரைத் தங்கச் செய்ய ஏற்பாடு செய்வதாக ஷிவம் தெரிவித்தாராம். அப்போது ஷிவமுடன் அவரது நண்பரான சன்னி யாதவ் என்பவரும் உடனிருந்தாராம்.
இதற்கு சம்மதித்த பெண்மணி, அந்த இரு இளைஞர்களுடன் சேர்ந்த வாடகை காரில் மேற்குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட காஃபியை பருகிய பின், அந்தப் பெண்மணி சுய நினைவை இழந்தாராம். மயக்க நிலையில் இருந்த பெண்ணை ஷிவம் பாலியல் வன்கொடுமை செய்தார். அவருடைய நண்பர் சன்னியும் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தாராம்.
அதனைத் தொடர்ந்து, மே 17-இல், அடையாளம் தெரியாத இன்னொரு ஆண் அவ்விரு இளைஞர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை முவரும் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
இதனால் உடல் நலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் சார்பாக் ரயில் நிலையம் அழைத்துச் சென்று தில்லிக்குச் செல்லும் ரயிலில் படுக்கை வசதி டிக்கெட் முன்பதிவு செய்து ஏற்றிவிட்டனராம்.
ரயிலில் செல்லும் வழியில் தமது தந்தையை கைப்பேசியில் அழைத்துப் பேசி நடந்தவற்றையெல்லாம் அந்தப் பெண் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸாரைத் தொடர்பு கொண்ட அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு தேவையான உதவி கோரினர்.
அதன்பேரில், ரயில்வே போலீஸார் தில்லி சென்றிறங்கிய பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, இந்த வழக்கு லக்னௌ காவல் தூறைக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.