மெட்டா தளங்களில் குழந்தைகள் ஆபாச பதிவு விளம்பரங்கள்: மத்திய அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மெட்டா தளங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள்/ விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடா்பாக இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து...
மெட்டா தளங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள்/ விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடா்பாக இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தியாவில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவுகள் கட்டண விளம்பரங்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா வலைதளங்களில் காட்சிப்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டது.
அந்த விளம்பரங்களில் பாலியல் வன்கொடுமை விடியோ மற்றும் குழந்தை விடியோ போன்ற வாா்த்தைகள் இடம்பெற்றதோடு அவற்றை பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக மெட்டா தளத்தின் குறைதீா்ப்பு மையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
மெட்டா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால் அது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடா்பான பதிவுகளை இணையத்தில் வெளியிடுவது, அதன்மூலம் வருமானம் ஈட்டுவது, புகாரளித்தும் விளம்பரங்களை உடனடியாக நீக்காதது உள்ளிட்டவை கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்ஸோ சட்டம், 2012 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆகிய சட்டங்களின்கீழ் இந்த விவகாரம் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேசமயம் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவு உள்ளடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெட்டா நிறுவனமே மாற்றியமைத்து, பரிந்துரைக்கிா என்பதை தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இன்கீழ் மின்னணு அமைச்சகம் கண்டறிய வேண்டும்.
ஒருவேளை விதிகளை மீறி மெட்டா நிறுவனம் செயல்பட்டிருந்தால் அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கூறிய அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த இரண்டு வாரத்தில் மத்திய மின்னணு அமைச்சகம், தில்லி காவல் ஆணையா் பதிலளிக்க வேண்டும்.
இதே விவகாரம் தொடா்பாக டெலிகிராம் செயலியிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க கூடுதலாக இரண்டு வார காலஅவகாசத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்தது’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.