நீதிக் கதைகள்! புத்தரின் சிலை புன்னகைத்தது!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
"தூதர்களே! நீங்கள் தெற்கு பர்மிய மன்னரிடம் சென்று வந்தீர்களே!.... போன காரியம் வெற்றிதானே!" என்று வடக்கு பர்மாவின் மன்னன் அனோரதா தன் தூதர்களைக் கேட்டான்.
"மன்னிக்க வேண்டும் மன்னரே!.... நாங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் தெற்கு பர்மிய மன்னர் சம்மதிக்கவில்லை. பாலி மொழியிலுள்ள புத்தரின் போதனைகள் அடங்கிய சுவடிகளைக் கொடுங்கள்!.... பிரதி எடுத்துக் கொண்டு தருகிறோம்.... என்று கூடக் கேட்டோம். ஆனால் அதற்கு அந்த மன்னர் கண்டிப்பாக மறுத்து விட்டார் அரசே!"
"அப்படியா சேதி!.... நாம் என்ன நாட்டையா கேட்டோம்?.... பொன்னையும், பொருளையுமா கேட்டோம்?... புத்தரின் போதனைகளைத் தானே கேட்டோம்!....
Advertisement
Advertisement
அதற்கே மறுத்துவிட்டானே! என்ன அகம்பாவம்?.... என்ன திமிர்?... அவனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்!.... தளபதிகளே! உடனே நம் படைகளைத் தயார்ப்படுத்துங்கள்!...தெற்கு பர்மா மீது போர் தொடுங்கள்!" என்று மன்னன் அனோரதா உத்தரவிட்டான்.
மன்னர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?.... உடனே வடக்கு பர்மியப் படை தெற்கு பர்மா மீது போர் தொடுத்தது!
தெற்கு பர்மிய அரசருக்கு வடக்கு பர்மா தன் மீது ஏன் போர் தொடுக்கிறது என்பதற்கான காரணம் தெரியும். அப்போது சுவடியைக் கொடுத்தால்கூடப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதற்குத் தயாராக இல்லை.
சுவடியைக் கொடுத்தால் தம்மைக் கோழை என்றுதான் படை எடுத்துவன் கருதுவான். அப்படி நினைக்க இடம் கொடுக்கக்கூடாது என்று நினைத்தே போரில் ஈடுபட்டான். தெற்கு பர்மிய மன்னன் தோல்வியடைந்தான். வடக்கு பர்மிய மன்னன் அனோரதா வெற்றி பெற்றான். அவனது லட்சியமான புத்தரின் போதனைகள் அடங்கிய பாலி மொழிச் சுவடிகளைக் கைப்பற்றினான். தெற்கு பர்மிய மன்னரையும், மந்திரி பிரதானிகளையும், தளபதிகளையும் கைது செய்து சிறையின் அடைத்தான்!
பிறகு தான் ஆசையோடு கைப்பற்றிய சுவடிகளைப் படித்தான். படிக்கப் படிக்க அனோரதா முன் ஒரு புதிய உலகம் விரிந்தது! ....புத்தரின் போதனைகள் என்ன? தாம் நடந்து கொண்ட விதம் என்ன?..... என்பதை நினைத்து வருந்தினான்! அரிய உபதேசங்கள் அடங்கிய அந்தச் சுவடிகளை வேகமாகப் பிரதி எடுத்தான். தன் தவற்றை உணர்ந்தான். தெற்கு பர்மிய மன்னரையும், அவரோடு சிறைப்பிடித்தவர்களையும் விடுதலை செய்தான். அவர்களது நாட்டையும் திருப்பி அளித்தான்! உரிய மரியாதைகளோடு அவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பினான்.
அந்த மூல ஓலைச் சுவடிகளையும் தெற்கு பர்மிய மன்னரிடமே திரும்பக் கொடுத்துவிட்டான் அனோரதா! புத்தரின் உபதேசங்கள் அவன் மனதில் பதிந்து விட்டதே! அவன் வைத்திருந்த புத்தரின் சிலை புன்னகைத்து...!
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.