முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிக்க தாலி செயினை விற்றுப் பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற கணவன்

ஸ்ரீவைகுண்டம் அருகே மது குடிக்க பணம்கேட்டு தொந்தரவு செய்துவந்த கணவன், தனது மனைவியிடம் தாலி சங்கிலியைக் கேட்டு தகராறு ...

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே மது குடிக்க பணம்கேட்டு தொந்தரவு செய்துவந்த கணவன், தனது மனைவியிடம் தாலி சங்கிலியைக் கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி தர மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு தலைமறைவானார்.

ஸ்ரீவைகுண்டம் மேலஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(75). இவருடைய மனைவி பெரியபிராட்டி(70). இவர்களுக்கு 6 மகள்கள், 3 மகன்கள். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். அர்ஜுனனுக்கு திருமணம் நடந்தபோது 75 பவுன் நகை மற்றும் நிலம் கொடுத்தனராம். குடிப்பதற்கும், பொழுது போக்குவதற்கும், மகள்கள் திருமணத்துக்கும் என்று அனைத்தையும் அவர் செலவு செய்துவிட்டாராம். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் தனியாக வசித்து வந்த தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பெரியபிராட்டி, பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கத் தொடங்கினாராம். இருப்பினும், அடிக்கடி பெரியபிராட்டியிடம் அர்ஜுனன் அவரது தாலிச் சங்கிலியைக் கழற்றிக் கொடு; குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம்.

இதனிடையே இருவாரங்கள் கோவை.யில் உள்ள தனது மூத்த மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஊர் திரும்பியுள்ளார் பெரிய பிராட்டி. அவரிடம் இன்று காலை தகராறு செய்த அர்ஜுனன், கையில் வைத்திருந்த அரிவாளால் தாலிக்கொடியை அறுத்து எடுக்க முயற்சி செய்துள்ளார். உன்னைக் கொன்றாவது அதை எடுத்துச் செல்வேன் என்று கூறிக் கொண்டே அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெரியபிராட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார். இதன் பிறகு தப்பியோடிவிட்டார் அர்ஜுனன். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.