அரூர்: விவசாயிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக 6 பேர் மீது வழக்குப் பதிவு
அரூர் அருகே விவசாயிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் அருகே விவசாயிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், கம்பைநல்லூரைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி மகன் கே.எஸ்.சக்திவேல் (45). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கம்பைநல்லூர்-இருமத்தூர் சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் 2 பேர் சாலையில் அடிப்பட்டு கீழே விழுந்து கிடந்தனராம்.
இதனைப் பார்த்த சக்திவேல் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு செல்ல உதவி செய்தாராம். இச் சம்பவம் செப்.9-ம் தேதி நடந்ததாம். அதன் பிறகு மறுநாள் காலையில் 6 பேர் கொண்ட கும்பல் விவசாயி சக்திவேலின் வீட்டுக்கு சென்றுள்ளனர். சாலையில் அடிப்பட்டு கிடந்தற்கு நீங்கள் தான் காரணம் என்று சக்திவேலிடம் தெரிவித்தனராம். இதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த கும்பல் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் மிரட்டி வாங்கியதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
இச் சம்பவம் குறித்து விவசாயி கே.எஸ்.சக்திவேல் அளித்த புகாரின் பேரில், கூடுதுறைப்பட்டியைச் சேர்ந்த மூக்காகவுண்டர், ஜக்கப்பட்டி ஊராட்சித் தலைவர் சின்னசாமி, ஜடையன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாது, கோபு, சக்கிலிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், கம்பைநல்லூரைச் சேர்ந்த போட்டோக்கடை பாய் ஆகிய 6 பேர் மீது கட்டப்பஞ்சாயத்து செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.