ராணுவ வீரரின் இரு சக்கர வாகனத்திலிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ரமேஷ் (32). இவர் இந்திய ராணுவத்தில் லேன்ட்ஸ் நாயக் ஆக பணிபுரிந்து வருகிறார். ஒரு மாத விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள ரமேஷ், வீட்டிற்கு காலி மனை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி சென்று ரூ.1.50 லட்சம் எடுத்துள்ளார். உடன் சென்ற தந்தை ஜெயராஜை, வங்கியில் நகைக் கடன் பெறுவதற்காக அமர வைத்துவிட்டு ரமேஷ், தனது இரு சக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
வங்கிலிருந்து எடுத்த பணத்தை இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி இருந்துள்ளார். வண்டியை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தினுள் சென்று வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக விசாரித்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து திரும்ப வந்துள்ளார். வந்து பார்த்தபோது, வண்டியின் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது தெரிய வந்ததது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.