முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவுடன் கைகோக்கும் யாரையும் ஏற்க மாட்டேன்: ஸ்டாலின்-வைகோ சந்திப்பு பற்றி தமிழருவி மணியன்!

ஊழல் மலிந்த அரசியல் அமைப்பு, மதுவினால் ஏற்படும் தீமைகள் ஆகிய இரண்டில் இருந்தும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும். இதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் கருத்தரங்கு ஈரோட்டில் ...

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

திமுகவுடன் கைகோர்க்கும் யாரையும் ஏற்கமாட்டேன் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவிமணியன் கூறினார்.

மு.க.ஸ்டாலின்-வைகோ சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது இந்த கருத்தை தமிழருவி மணியன் தெரிவித்தார்.

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசமைப்பில் ஆசிரியர், மாணவர் பங்கு என்னும் தலைப்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஊழல் மலிந்த அரசியல் அமைப்பு, மதுவினால் ஏற்படும் தீமைகள் ஆகிய இரண்டில் இருந்தும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும். இதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் கருத்தரங்கு ஈரோட்டில் தொடங்கப் பட்டுள்ளது.

நடிகர்கள் விரிக்கும் மாயவலையில் இளைஞர்கள் விழக் கூடாது. எந்த திரைப்பட நடிகராலும் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. கருப்பு பணத்தில் திளைக்கும் நடிகர்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது. ரஜினி, விஜய் என யாராக இருந்தாலும் எனது கருத்து இது தான்.

தமிழகத்தில் முதல்வராக இருந்த பிரகாசம் முதல் அண்ணா காலம் வரை ஊழல் இல்லாத அரசமைப்பு இருந்தது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றப்பின்னர் ஊழல் அரசமைப்பு உருவாகிவிட்டது. தமிழகத்தின் எந்த ஒழுங்கீனம், அரசியல் குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக கருணாநிதி இருக்கிறார்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது மென்மையான அணுகுமுறையையே இப்போது கடைபிடிக்கிறேன். என்னை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் இரு எதிரிகளை வீழ்த்துவது விவேகமான செயல் அல்ல.

அதிமுகவின் வீழ்ச்சி திமுகவின் எழுச்சியாக இருந்துவிடக்கூடாது என்பதில் இப்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். வைகோ போர்க்குணம் மிக்க நல்ல தலைவராக இந்த நிமிடம் வரை அவரை பார்க்கிறேன். எந்த நிலையிலும், திமுக, அதிமுகவுடன் அவர் இணக்கம் காட்டக்கூடாது.

வைகோ தூய்மையானவர்தான். ஆனால், தூய்மையானவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூய்மையான பயணித்து தூய்மையான அரசியலில் அவர் ஈடுபட வேண்டும். திமுக முடிந்து விட்ட கட்சி. அதிமுக முடிந்துபோகும் கட்சி. 2016-ல் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகும்.

அப்போது தமிழகத்தில் வைகோ தலைமை ஏற்பது தவிர்க்க முடியாத சூழல் உருவாகும். இன்னும் 18 மாத காலம் அவர் காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படும் போது, ஈழ அரசியல் பிரச்னைக்குத் தீர்வு, மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாப்பது, கச்சத் தீவை மீட்பது ஆகிய வாக்குறுதிகளை பாஜக இதுவரை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேற வேண்டும் என்றார்.

மு.க.ஸ்டாலின்-வைகோ சந்தித்துள்ளது பற்றியும், கூட்டணி குறித்து கருணாநிதியின் கருத்து பற்றி வைகோவும், வைகோ கருத்து பற்றி கருணாநிதியும் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறித்தும் தமிழருவி மணியனிடம் கேட்டபோது, திமுகவுடன் கைகோர்க்கும் யாரையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.