முகப்பு
தற்போதைய செய்திகள்

18,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டம்!

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 4:15 PM
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 4:05 PM

சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், நடப்பு காலாண்டில் சுமார் ஒன்றரை பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதால் 18,000 (15%) பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ. 83,000 கோடி மதிப்பிலான செலவைக் குறைக்கப் போவதாக இன்டெல் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் கடந்த ஆண்டு இறுதியில் 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருந்தது.

தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்தாலும், இன்டெல் சிப் தனித்துவத்தை முறியடிக்கமுடியவில்லை என்றே கூறலாம்.

Advertisement

ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் ஆகஸ்ட்-1 ஆம் தேதி அதிர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. அதாவது, இன்டெல் பணியாளர்களில் 18,000 பணியாளர்களை(15%) பணி நீக்கம் செய்வது, குறிப்பிடத்தக்க செலவு-குறைப்பு உள்ளிட்ட திட்டத்தை அறிவித்தது.

இதனால் நடப்பாண்டில் இன்டெல் நிறுவனத்தின் ரூ. 83,000 கோடி (10 பில்லியன் டாலர்) மதிப்பிலான செலவைக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை அமல்படுத்தப்படும் நிலையில் சுமார் 18,000 பணியாளர்கள தங்களது பணிகளை இழக்க நேரிடும்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 4:11 PM

மேலும் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலில் உள்ள சிப் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இன்டெல் அறிவித்தது. அப்போது "பெரிய அளவிலான திட்டங்களை நிறுத்தி வைப்பது என்பது வணிக நிலைமைகள், சந்தையின் நிலைப்பாடு மற்றும் பொறுப்பான மூலதன மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்று தெவித்தது.

அடுத்த வாரத்தில் பணியாளர்களின் பணி நீக்க நடவடிக்கை தொடங்கும் என்றும் பெரும்பாலான பணிநீக்கங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை மட்டுமே வளர்ந்து வரும் சிப் சந்தையில் அதன் நிலையை மறுவரையறை செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்று சந்தையியல் ஆய்வாளர் ஜேக்கப் பார்ன் கூறியுள்ளார்.

மேலும் பல ஆண்டுகளாக மடிக்கணினிகள் முதல் தரவு மையங்கள் வரை அனைத்தையும் இயக்கும் சிப்களுக்கான சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இன்டெல், சமீபத்திய காலங்களில் அவர்களின் போட்டியாளரான என்விடியா சிறப்பு ஏஐ செயலிகளில் முன்னோக்கி உயர்ந்துள்ளது.

இதனால் இன்டெலுக்கு பல சவால்களை கண்டு சரிவையும் கண்டது. இப்படி பின்னடைவை சந்தித்த பிறகு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கவனம் செலுத்த உள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்துறை இதுவரை கண்டிராத புதுமையின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ). இது மனித ஆற்றலின் எல்லைகளை கடந்தும் வரவிருக்கும் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, டெல், ஹெச்பி, சாம்சங் மற்றும் லெனோவா உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கணினி உற்பத்தியாளர்கள் இணையத்தில் மட்டுமின்றி சாதனத்திலேயே ஏஐ சிறப்பு அம்சங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.