மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 38.17 அடி உயர்வு!
மேட்டூர் அணை நிலவரம்...
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 38.17 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
பருவமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 16 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
Advertisement
நீர்வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக மட்டும் வினாடிக்கு 1000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
கடந்த 16ஆம் தேதி காலை 43.83அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.00அடியாக உயர்ந்தது. ஒரே வாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 38.17அடி உயர்ந்துள்ளது.
இன்று(ஜூலை 23) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 79,682 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 43.97 டிஎம்சியாக உள்ளது.
இன்று 7 வது நாளாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர் மற்றும் பண்ணவாடிப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.