மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1.34 லட்சம் கன அடி!
அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டியது!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,34,115 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.
அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று(ஜூலை 28) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,34,115 அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று இரவு 103.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.69 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.16 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் இருந்தால், நாளை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.
அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். காவிரி கரைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளிலும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான அடிபாலாறு செட்டிபட்டி,கோட்டையூர் பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.