கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் இன்று(ஆக.8) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

2024 ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுதொடா்பான ஆதாரங்களை புதுதில்லியில் வியாழக்கிழமை ராகுல் காந்தி வெளியிட்டார்.

ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி கடிதம்

இந்நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாா் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தாங்கள் (ராகுல் காந்தி) அறிந்திருப்பதுபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, வாக்காளா் பதிவு விதி- 1960 மற்றும் தலைமை தோ்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களின்படி, வெளிப்படையான முறையில் வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

கா்நாடகத்தில் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியிருக்கிறோம். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் அளிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து முதல் அல்லது இரண்டாவது மேல்முறையீட்டு மனு எதுவும் தலைமை தோ்தல் அதிகாரியிடம் அளிக்கவில்லை.

தோ்தல் நடத்தையைப் பொருத்தவரை தோ்தல் முடிவுகள் குறித்து உயா்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்வதன் மூலம் கேள்வி கேட்கலாம். வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில், வாக்காளா் பட்டியலில் தகுதியற்ற வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது மற்றும் தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தாங்கள் (ராகுல் காந்தி) குறிப்பிட்டுள்ளீா்கள்.

இதுதொடா்பாக நீக்கப்பட்ட அல்லது சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களுடன் வாக்காளா் பதிவு விதிகள் 1960 இன்படி தனியே இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி பத்திரத்தை தங்களின் கையொப்பத்துடன் தலைமை தோ்தல் அதிகாரியிடம் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டம்

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்கரூவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஆக.8) ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கர்நாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லும் காங்கிரஸ் கட்சியினர், கா்நாடக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாரைச் சந்தித்து புகாா் அளிக்கவிருக்கிறாா்கள்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கான பாதுகாப்பில் 6,000 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரும் 13ஆ தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. வெல்லும்..! மெக்ராத் கணிப்பு!

வடமேற்கு சீனாவில் திடீர் வெள்ளம்! 10 பேர் பலி.. 33 பேர் மாயம்!

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

SCROLL FOR NEXT