நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!
நியூயார்க்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமந்தீப் சிங் (வயது 36) என்ற நபர் மது மற்றும் கொக்கெய்ன் பயன்படுத்திய போதையுடன் நியூயார்க்கின் வடக்கு ப்ராட்வே சாலையில் தவறான பாதையில் தனது காரை அதி வேகமாக ஓட்டியுள்ளார். மணிக்கு வெறும் 40 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுபாடுகள் உள்ள சாலையில் அவர் 95 கி.மீ வேகத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அதில் பயணித்த 14 வயது மாணவர்களான ஈதன் ஃபாகோவிட்ஸ் மற்றும் ட்ரூ ஹாசென்பெயின் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியானதுடன் மேலும், 2 பேர் படுகாயமடைந்தார்கள்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடி ஒளிந்துக்கொண்ட அமந்தீப் சிங்கை அந்நாட்டு காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததுடன் தான் அந்நாட்டின் நியூஜெர்சியில் இருப்பதாக கருதி தனது காரை அவர் ஓட்டி வந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தான் இந்த குற்றத்தை செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த அமந்தீப் சிங் கடந்த ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (பிப்.7) மினேயோலாவிலுள்ள நசாவு கவுண்டி நீதிமன்றம் அவருக்கு 8 1/3 முதல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அம்ந்தீப் சிங் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது போலீஸார் அணிந்திருந்த கேமராவில் பதிவாகியிருந்தது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.