ஜிம்பாப்வேவில் மரண தண்டனை ஒழிப்பு!
ஜிம்பாப்வே நாட்டில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி...
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் மரண தண்டனை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது.
பிரிட்டனின் காலனி நாடாக இருந்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த மரண தண்டனை விதிக்கும் சட்ட முறையை ஜிம்பாப்வே நாடானது தற்போது ரத்து செய்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு மக்களைவையில் மரண தண்டனையை ரத்து செய்ய அதன் உறுப்பினர்களினால் வாக்களிக்கப்பட்டு மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிச.31 அன்று அந்த புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி எம்மர்சன் அதனை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வர உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் கையொப்பம் பெறப்பட்ட பின்னர் அந்நாட்டு அரசாங்க இதழில் மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் வெளியிடப்பட்டது.
இருப்பினும், அவசரக் கால சூழ்நிலைகளில் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனும் மசோதாவை நீக்கி தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் மரண தண்டனை ஒழிப்புச் சட்டத்தை எல்லா காலத்திற்கும் பொருந்தும்படி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: அமெரிக்கா: காா் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
இறுதியாக, ஜிம்பாப்வே நாட்டில் 2005 ஆம் ஆண்டில் ஓர் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதன் நீதிமன்றங்கள் கடுமையான குற்றங்கள் செய்தோருக்கு தொடர்ந்து மரண தண்டனையை விதித்து வந்தது.
2023 ஆம் ஆண்டின் கணக்குப்படி ஜிம்பாப்வே நாட்டில் சுமார் 60 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில், அந்த 60 பேருக்கும் அவர்கள் செய்த குற்றம் மற்றும் அவர்கள் சிறையில் கழித்த காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களது வழக்கை மறுபரிசீலனைச் செய்து தீர்பு வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டு நீதிபதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜிம்பாப்வே நாடு சுதந்திரம் பெற்றது முதல் அதனை ஆட்சி செய்து வரும் ஜனு-பிஎஃப் கட்சி, அந்நாட்டில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் எனத் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தது.
முன்னதாக, தற்போதைய ஜனாதிபதி மங்காக்வா அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது ரயில் குண்டுவெடிப்பில் ஈடுப்பட்டதற்காக அவருக்கு அப்போதைய பிரிட்டன் அரசினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது வரை சர்வேதேச அளவில் 113 நாடுகளில் மரண தண்டனையை ஒழித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது, அதில் 24 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.