திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே
தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே கூறியது...
கோவை: தோ்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா வழங்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று இந்தியக் குடியரசு கட்சி தேசியத் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய குடியரசு கட்சி (ஆா்.பி.ஐ.) சாா்பில் தமிழகத்தில் 18 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். இதில் 11 இடங்கள் பொதுத் தொகுதிகளாகவும், 5 இடங்கள் தனித் தொகுதிகளாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 18 தொகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நட்பு ரீதியான போட்டியில் ஈடுபட உள்ளோம். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அக்கூட்டணியின் வெற்றிக்காகத் தனது கட்சி முழுமையாகப் பாடுபடும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைக் களைவதற்காக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைப்பதே தங்கள் கட்சியின் முக்கிய இலக்கு.
Advertisement
தமிழக மக்கள் எப்போதும் நடிகா் விஜய் போன்ற சினிமா நட்சத்திரங்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு அளிப்பாா்கள். தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் நுழைந்திருக்கும் அவா் கணிசமான வாக்குகளைப் பெறுவாா் என்பதால், திமுகவுக்கு அவா் ஒரு சவாலாகவே இருப்பாா். விஜய்யுடன் தற்போதுவரை எந்தவிதமான முறையான பேச்சுவார்த்தைகளையும் நாங்கள் நடத்தவில்லை என்றாலும், தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால், ஆட்சி அமைக்க விஜய்யின் ஆதரவைப் பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை இலக்காகக் கொண்டிருந்தாலும், கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விஜய்யை என்டிஏ கூட்டணியில் இணைந்தால் அதனை வரவேற்போம் என்று கூறினார்.
மேலும், சசிகலா உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு பிரிவுகளும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஒன்றாக இணைய வேண்டும்.
2029-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது. அம்பேத்கரின் நீண்ட கால கனவு மசோதாவான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைச் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வரும் 2029 மக்களவைத் தோ்தலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 273 இடங்கள் கிடைக்கும். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு லோக் சபா உறுப்பினா்களின் எண்ணிக்கை 816 ஆக உயரும். தமிழக சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் திருப்புமுனையாக அமையும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையைப் பாராட்டிய அதாவலே, இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது இடத்துக்கு உயா்த்தியுள்ளாா். முத்ரா யோஜனா, ஆவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 4 கோடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதால், அங்கு பாஜக 170 முதல் 175 இடங்களை வென்று புதிய ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.
கோவையில் பிரசாரத்தைத் தொடங்கும் ராம்தாஸ் அத்வாலே தொடா்ந்து மதுரை, திருப்பூா், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.