முகப்பு
செய்திகள்

எப்போதும் எதையும் கற்றுக் கொள்ளலாம்!

கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் படிக்கும் படிப்போடு Add - 0n - Course என்னும் இன்னொரு படிப்பை மாணவர்கள் படிக்க வேண்டும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:22 PM
பகிர்:

"இங்குள்ள மாணவர்களுக்கு சுதந்திரமும், வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. அவர்கள் நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொண்டால், எதிர்காலம் குறித்து திட்டமிடுவது சுலபமாகிவிடும்''  என்கிறார் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மு.பாஸ்கரன்.  அவரிடம் பேசியபோது...
"தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.

கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் படிக்கும் படிப்போடு Add - 0n - Course என்னும் இன்னொரு படிப்பை மாணவர்கள் படிக்க வேண்டும். மேலும் தற்போது பிரபலமாக இருக்கின்ற course அடுத்த சில ஆண்டுகளில் "டல்' அடிக்கும்போது, அதைச் சமாளிக்கும் மனநிலை மாணவர்களுக்கு இயல்பாகவே அப்போது ஏற்படும்.

மாணவர்கள் தங்கள் பாடப் பிரிவைத் தேர்வு செய்யும்போது, கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேநேரத்தில் தங்கள் விருப்பமான பாடப்பிரிவைத் தேர்வு செய்துகொண்டு, பாடத்தைப் புரிந்து கொண்டு படிக்கும் மாணவன் தேர்வுகளில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தோற்பதில்லை.

ப்ளஸ் டூ வரை மதிப்பெண் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தயார்ப்படுத்தப்பட்ட பல மாணவர்கள், உயர் கல்வி என்கின்ற அதி - நவீன சூழலுக்குச் செல்லும்போது, தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தடுமாறுகிறார்கள். இவற்றை எதிர்கொள்ளும் வகையில் அந்த மாணவர்களைத் திடப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு நிறையவே இருக்கிறது. மதிப்பெண்களும் அவசியம்; அத்தோடு பிற சவால்களைச் சமாளிக்கும் மனதிடமும் மாணவர்களுக்கு அவசியம், அதற்கான பயிற்சி மையங்கள் அவசியம்.

பெண் கல்வியைப் பொருத்தவரையில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. படிப்பு விஷயத்தில் பெண்கள் தீவிரமாக இருக்கிறார்கள். வேலைக்காக, உயர் பதவிக்காக, மனதிருப்திக்காக என்று எப்போதும் படித்துக் கொண்டிருக்கும் மனநிலை பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினருக்கும் உபயோகமான ஒன்று. 

எப்போதும் எதையும் கற்றுக் கொள்ளலாம். யாரிடமிருந்தும் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். எத்தனையோ பேர் வாய்ப்பிற்காக காத்துக் கிடக்கின்றபோது, நமக்குக் கிடைத்த வாய்ப்பை அல்லது பொறுப்பை சரியானபடி பிரயோகிப்பதில்தான் நமது முன்னேற்றமும் நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. சோம்பேறித்தனத்திற்கும் எதிர்மறையான பேச்சிற்கும் எப்போதுமே இடமில்லை'' என்கிறார் பாஸ்கரன்.

முழு கட்டுரையைப் படிக்க →