முகப்பு
ஸ்பெஷல்

காதலுக்காக ஏஞ்சலின் என்ன செய்தாள் தெரியுமா?

காதலுக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

காதலுக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை ஏழை பணக்கார வேறுபாடுகள் இல்லை என்பது எல்லாம் சினிமா காட்சிகள் என்று தானே நினைத்திருப்போம். இல்லை என்று நிருபித்துள்ளார் இந்த மலேஷியப் பெண். மலேஷியாவில் பெரும் பணக்காரரான கூ கே பெங்கின் மகள் ஏஞ்சலின் ஃப்ரான்சிஸ் கூ தான் அதை நிருபித்த பெண். ஏஞ்சலினின் அப்பாவுக்கு கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் காதலிக்கும் ஒருவர் மிகவும் சாதாரணமானவர். இந்தக் காரணத்தால் கூ கே பெங் அத்திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

பணமா பாசமா என்ற ஊசலாட்டத்துக்குள் எல்லாம் ஏஞ்சலின் செல்லவில்லை. ஒரே நொடியில் தனக்குரிய எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டது  காதல் தான் வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் ஏஞ்சலின்.

78 வயதான கூ கே பெங் மலேயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீயின் சேர்மன். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் இவர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2015 -ல் உலகின் 44 பணக்காரராக கூவை பட்டியலிட்டிருந்தது. அவருடைய சொத்துக்களின் மதிப்பு 300 மில்லியன் டாலர்கள் என்கிறது அப்பத்திரிகை.

கூவின் முன்னாள் மனைவியின் மூலம் ஐந்து பெண் குழந்தைகள் அவருக்குண்டு. ஏஞ்சலின் கூ அவரது நான்காவது மகள். பிரான்சிஸ் என்பவரைக் காதலிக்கிறேன் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஏஞ்சலின் அப்பாவிடம் கூறிய போது கூ உடனடியாக மறுத்துவிட்டார். ஜெடைடா பிரான்சிஸை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஏஞ்சலின் சந்தித்திருக்கிறார். அவர்கள் காதல்வயப்பட்ட பின் திருமண ஒப்புதலுக்காக தந்தையை அணுகியபோது அவர் மறுத்துவிட்டார். ஏஞ்சலினுக்கு அவருடைய தந்தையின் சொத்துக்கள் முக்கியமாகப் படவில்லை. அவள் கண்களையும் மனத்தையும் நிறைத்தவர் பிரான்சிஸ் மட்டுமே.

'அப்பாவின் முடிவு தவறு என்று எனக்குத் தெரியும். பணம் பத்தும் செய்யும். பலவிதமான எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடும். எனவே முதலில் நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். இவ்வளவு சொத்துக்களை விட்டுவிட்டு எப்படி வர முடியும் என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவே படவில்லை' என்றார் ஏஞ்சலின். 

ஏஞ்சலின் கூ இப்போது ஃபேஷன் டிசைனராக பணி புரிகிறார். அவருடைய அப்பாவின் சொத்து மதிப்பு விபரங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. அவரது தாய்க்கும் தந்தைக்கும் நீண்ட காலம் நடந்து கொண்டிருந்த விவாகரத்து வழக்கின் போது தான் அதைப் பற்றி அவருக்குத் தெரிய வந்ததாம்.

ஏஞ்சலின் எளிய முறையில் பிரான்சிஸை மணம் முடித்தார். அவருடைய திருமணத்துக்கு வந்தவர்கள் மொத்தம் 30 பேர் மட்டும்தான். தன்னுடைய அப்பா ஒரு நாள் கோபத்தை மறந்து எங்களை ஏற்றுக் கொள்வார் என்று நம்பிக்கையாகக் கூறுகிறார் ஏஞ்சலின். காதலின் பொன் தீபமொன்று ஏஞ்சலினின் வாழ்க்கையில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.