ஸ்ரீ அக்னி புராணம்
ஸ்ரீ அக்னி புராணம் - சி.நா.கிருஷ்ணமாச்சாரியார்; பக்.208; ரூ.130; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
ஸ்ரீ அக்னி புராணம் - சி.நா.கிருஷ்ணமாச்சாரியார்; பக்.208; ரூ.130; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
வியாசர் தொகுத்த புராணங்கள் 18. அவற்றில் எட்டாவது புராணம் அக்னி புராணம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்களை முதன்முதலில் உலகுக்குத் தெரிவித்தவர் சூதமுனிவர். அவரிடம் இருந்து நைமிசாரண்ய முனிவர்கள் கேட்டுப் பரப்பினர். இவை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களின் தொழில்கள், சிறப்பியல்புகளையும் தெரிவிப்பவை. 15,400 சுலோகங்கள் கொண்ட அக்னி புராணத்தை அக்னி வசிஷ்டருக்குக் கூறியதாகவும், வசிஷ்டர் வியாசருக்குச் சொன்னதாகவும் அவரிடம் இருந்து சூதமுனிவர் மூலம் உலகுக்கு வந்ததாகவும் கூறுவர். இதில் உலகின் தோற்றம், பிரளயம், உயிர்களின் தோற்றம், மறைவு, கல்வி ஆகியவற்றை அறிந்தவனே பகவான் என்றும், சிவன், கணேசர், துர்க்கை ஆகியவர்களை பூஜிக்கும் முறை, யாப்பு, இலக்கணம், மருத்துவம், உலகியல் தர்மங்கள், அரசியல் தன்மை, வானியல், ஜோதிடம் உள்ளிட்டவையும் உண்டு. "மகாவிஷ்ணுவே பிரம்மம், உலகைத் தோற்றுவித்தவர் அவரே. தன்னையே பிரம்மமாக உணரும்போது, பிரம்ம சொரூபத்தை ஒருவன் அடைகிறான்' என்றெல்லாம் விளக்குவது இந்த புராணம். பிரம்ம ஞானம் பெற யாகம், கர்மாக்கள் செய்வது, ச்ருதி, ஸ்ம்ருதி, சாஸ்திர புராணங்களை அறிவது, கேள்வி ஞானம் கைவரப் பெறுவது, அதன் மூலம் பகவானை அறிவது இவற்றை அக்னி புராணம் விளக்குகிறது. இந்த நூலில் 74 அத்தியாயங்களில் இவற்றுக்கான விளக்கக் கதைகள் எளிமையாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு. அஷ்டாங்க யோகம், பசுவின் மகிமை, நான்கு ஆசிரமங்கள், நரக வேதனை எனப்படுவது, விரதங்கள், ஆண், பெண் அங்க லட்சணங்கள் ஆகிய தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் சிறப்பானவை. ஆன்மிக முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு உதவும் படைப்பு.