முகப்பு
செய்திகள்

மனம் என்ற குரங்கை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற அடிப்படையில் மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள

Updated On : 26 ஆகஸ்ட் 2019, 5:46 pm IST
பகிர்:

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற அடிப்படையில் மனிதனுக்கும், குரங்குக்கும் உள்ள உறவு காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குரங்கின் குணம் மரத்திற்கு மரம் தாவுவது. மனிதனின் மனமும் அவ்வாறுதான்.

குரங்கு தாவினால் அதற்கு எந்தவொரு தீங்கேதும் ஏற்படப்போவதில்லை. ஆனால் மனிதனின் தாவுகின்ற மனத்தால் அவன் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. 

என்னதான் மனக்குரங்கு மனிதனை ஆட்டிவைத்தாலும், மனிதன் குரங்கை ஆட்டிவைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறான். அவதார புருஷர்களுக்கே துணைசெய்த இந்த அரிய மிருகம் எதையும் புரிந்துகொள்ளும் திறனையும், புத்திக்கூர்மையும் கொண்டது. 

Advertisement

Advertisement

இதை மனிதன் பழக்கிப் பல பேரிடம் பிச்சை கேட்க வைப்பது தான் வேடிக்கையான விஷயம். கராத்தே நிபுணர் ஒருவர் தன் மாணவர்களுக்கு அந்தக் கலையைக் கற்றுக் கொடுத்து காசு சேர்ப்பதை விட்டுவிட்டு, ஒரு மனிதக் குரங்குக்கு கற்றுத்தந்து அதில் வெற்றியும் பெறுகிறார். ஏனென்றால் ஒரு மிருகத்துக்கு எண்ணச் சிதறல்கள் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. 

அதன் ஆசைகளும், தேவைகளும் மிகக் குறைவு. அதனால் தான் இந்த மனிதக்குரங்கால் தன் மனதைக் குவித்து மனிதன் செய்வதைப் பார்த்து தானும் அப்படியே செய்து ஓர் அற்புதக் கலையைக் கற்க முடிந்திருக்கிறது. ஆனால், பேசும் மனிதனால் ஒன்றைக் கற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமாகவே இருக்கிறது. 

ஒரு விஷயத்தை உள்வாங்குகிற அதே சமயத்தில் மனம் வெளிச்சென்று வேறு விஷயங்களை நாடுகிறது. மனத்தை ஒருநிலைப்படுத்துவது மனிதனிடம் குறைவாகவே உள்ளது. மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டுமானால் எண்ணச் சிதறல்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நலம் பயக்கும். எனவே மனிதனை விட மிருகங்களுக்கு எளிதில் கற்றுக்கொடுக்கமுடியும் என்பதை இந்த நிபுணர் நிரூபித்திருக்கிறார்.

ஒரு மிருகத்தை மனிதனாக்க எடுத்துக்கொள்கிற முயற்சியைப் போன்றே, ஒவ்வொரு மனிதனும் தன்னிலிருந்து உயர்ந்து தெய்வமாகிற முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. ஒரு மனிதக் குரங்குக்குத் தற்காப்புக் கலையைப் பழக்கி அதில் வெற்றி கண்ட மனிதன் தன் மனக்குரங்கைப் பழக்கித் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மனதில் உறுதி இருந்தால் வழி பிறக்கும்..

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..

"ஆரோக்கிய வாழ்வுக்குத் தியானம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்"

- தொகுப்பு - கோவை ச. பாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.