அந்த வேஷத்தை பகவதி போல யாராலும் நடிக்க முடியாது - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
தமிழ் நாடகத் துறையின் மானமாக விளங்கி வந்த டி.கே .எஸ் சகோதர்களில் எஞ்சியிருந்த டி.கே.பகவதி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
தமிழ் நாடகத் துறையின் மானமாக விளங்கி வந்த டி.கே .எஸ் சகோதர்களில் எஞ்சியிருந்த டி.கே.பகவதி அவர்கள் சமீபத்தில் காலமானார். ஆழ்ந்த துக்கத்தில் பங்கு கொள்ள இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களை அணுகினோம்.
டி.கே.எஸ். பிரதர்ஸ் நால்வராவார்கள். சங்கரன், முத்துசாமி, சண்முகம் மற்றும் பகவதி. இவர்களில் சண்முகம் அண்ணாச்சியும், பகவதியும் என்றும் இணை பிரியாமல் இருப்பார்கள்.சேர்ந்தே போவார்கள். சண்முகம் காலமானத்திற்கு பிறகுதான் இருவரும் பிரிந்தனர். அதிலிருந்து பகவதி அண்ணாச்சி ஒரு மாதிரியாக ஆகிவிட்டார்கள்.
மதுரையில் டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகம் நடத்திக் கொண்டிருந்த பொழுது நான் வத்தலக்குண்டில் ஏ .எம்.எம்.சி கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தேன். டி.கே .எஸ் பிரதர்ஸ் நாடக குழுவில் சேர்ந்து கொள்ளச் சொல்லி, என் கையில் ஐந்து அணாவும் கொடுத்து மதுரைக்கு அனுப்பி விட்டார் என் ஆசிரியர். சண்முகம் அண்ணாச்சியும் பகவதியும் ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக் கொண்டு என்னை பாடிக் காட்டச் சொன்னார்கள். பாடிக் காட்டினேன். அருகில் நின்று கொண்டிருந்த டி .வி. நாராயணசாமியிடம் அபிப்ராயம் கேட்டார்கள்.பையன் பர்ஸனாலிட்டியாக இருக்கிறான். தர்பாரில் போடலாம் என்று சொன்னார். அவர் சொன்னபடி 'சிவலீலா' நாடகத்தில் தொடர்ந்து 108 நாட்கள் தடி தூக்கி கொண்டுதான் நின்றேன். அவ்வாறு எட்டு வயதில் அரைக்கால் சட்டைபோட்டுக் கொண்டு அந்த குழுவில் சேர்த்தேன்.அரும்பு மீசையுடன்தான் வெளியே வந்தேன்.
Advertisement
Advertisement
ஆரம்ப காலத்தில் பகவதி பபூன் ஆக்ட் பண்ணிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு படிப்படியாக உயர்ந்து வில்லன் வேஷம் போட ஆரம்பித்தார்.ராஜராஜ சோழனாக டி.கே .பகவதி நடித்ததை
பார்த்த பிறகுதான் அதை படமாக தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் உமாபதிக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த வேஷத்தை பகவதி போல யாராலும் நடிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். அவருடைய உடற்கட்டும் கம்பீரமும் இது போன்ற வேடங்களை செய்ய அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
பொதுவாக சண்முகம் அண்ணாச்சி நாடகம், பாடம், நடிப்பு என்றிருப்பார். அதனால் நாடககக்குழுவின் நிர்வாகம் அனைத்தையும் பகவதிதான் கவனித்துக் கொள்வார். குழுவில் உள்ள பிள்ளைகளை எல்லாம் அத்தனை அக்கறையாக எப்பொழுதும் கவனித்துக் கொள்வார்.
சந்திப்பு: மருதம்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.12.82 இதழ்)