முகப்பு
கிரிக்கெட்

யு-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 8 டிசம்பர், 2024 at 12:57 PM
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (டிசம்பர் 8) துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேச அணி முதலில் விளையாடியது.

198 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய வங்கதேசம் 49.1 ஓவர்களின் முடிவில் 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஸான் ஹொசைன் 47 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ஷிகாப் ஜேம்ஸ் 40 ரன்களும், ஃபரித் ஹாசன் ஃபைசல் 39 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேட்டன் சர்மா, ஹார்திக் ராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிரண் ஜோர்மெல், கார்த்திகேயா மற்றும் ஆயுஷ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

வங்கதேசம் சாம்பியன்

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 35.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கேப்டன் முகமது அமான் 26 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹார்திக் ராஜ் 24 ரன்கள் எடுத்தும், கார்த்திகேயா 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

139 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழக்க, வங்கதேசம் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

வங்கதேசம் தரப்பில் கேப்டன் அஸிஸுல் ஹக்கீம் தமிம் மற்றும் இக்பால் ஹொசைன் தலா 3 விக்கெடுட்டுகளைக் கைப்பற்றினர். அல் ஃபாகத் 2 விக்கெட்டுகளையும், மரூஃப் மிரிதா, ரிஸான் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இக்பால் ஹொசைன் இமான் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →