யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அழுத்தத்தில் வைத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி: அனில் கும்ப்ளே
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 65 சிக்ஸர்கள் விளாசியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 680 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் அண்மையில் படைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை சிறிது அழுத்தத்தில் வைத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். ஒன்றிரண்டு அணிகளுக்கு எதிராக நன்றாக விளையாடியதால், அவருக்கு ஆரஞ்சு தொப்பி கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த இளம் வீரர் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். அவர் நன்றாக விளையாடினாலும் ஒரு விதமான அழுத்தத்தில் வைக்கப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம் குறித்து அதிகம் பேசப்பட்டது. ஆனால், தற்போது 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி குறித்து அனைவரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி இணை சிறப்பாக விளையாடியது. 8 ஓவர்களில் கிட்டத்தட்ட 120 ரன்கள் எடுத்தனர். ஆனால், அதிக அளவிலான ரன்களை வைபவ் சூர்யவன்ஷியே எடுத்தார். ஜெய்ஸ்வால் மெதுவாகவே ரன்கள் குவித்தார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 426 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.