ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், 2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர்!
2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய...
2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
1995-96-ல் பஞ்சாப் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் தினேஷ் மோங்கியா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மோங்கியா, 57 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் ஒரு டெஸ்டிலும் விளையாட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்திய அணியின் முதல் சர்வதேச டி20 ஆட்டத்தில் இடம்பெற்ற மோங்கியா 38 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர் மோங்கியா தான்.
2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றது இந்திய அணி. இந்திய அணியில் கும்பிளேவை சேர்க்காமல் ஆல்ரவுண்டர் என்கிற காரணத்துக்காக மோங்கியாவை ஆட வைத்தார் கேப்டன் கங்குலி. பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ரன்கள் கொடுத்தார் மோங்கியா. பேட்டிங்கில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். பிசிசிஐயால் அங்கீகரிக்காத ஐசிஎல் அமைப்பில் சேர்ந்து விளையாடியதால் பிறகு மோங்கியாவால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போனது. கடந்த வருடம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 42 வயது மோங்கியா, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.