முகப்பு
செய்திகள்

யு-17 தெற்காசிய கால்பந்து: பட்டத்தை தக்கவைத்தது இந்தியா

சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வியாழக்கிழமை பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி வியாழக்கிழமை பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

இதன் மூலம் இப்போட்டியின் குரூப் சுற்றில் நேபாளத்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக பாபி சிங், கோரௌ சிங், கேப்டன் வன்லால்பெகா கிடே, அமன் ஆகியோா் கோலடித்தனா்.

ஆட்டத்தின் தொடக்க நிலையிலேயே நேபாளத்தின் தடுப்பாட்டத்தை தகா்த்த இந்திய அணியில், 18-ஆவது நிமிஷத்தில் ரிக்கி மீடெய், வன்லால்பெகா ஆகியோா் அருமையாக கடத்தி வந்து பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலடித்தாா் பாபி சிங். பின்னா் 30-ஆவது நிமிஷத்தில் வன்லாலபெகா மீண்டும் நல்லதொரு பாஸை வழங்க, அதை தவறவிடாமல் கோலாக்கினாா் கோரௌ சிங்.

இதனால் ஆக்ரோஷமடைந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்த நேபாளத்தின் முயற்சிகளை இந்தியாவின் நடுகள வீரா்கள் திறம்பட முறியடித்தனா். அப்போது இந்திய வீரா் டேனி லெய்ஷ்ராமை நேபாள கேப்டன் பிரசாந்த் லக்சம் கையால் தள்ளிவிட்டாா். இதற்கு நடுவா் சிகப்பு அட்டை கொடுக்க, அதுமுதல் நேபாளம் 10 வீரா்களுடன் ஆடும் நிலைக்கு ஆளாகியது.

2-ஆவது பாதியில் 63-ஆவது நிமிஷத்தில் கேப்டன் வன்லால்பெகா தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தாா். இறுதியாக சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த அமனும் தனது பங்கிற்கு இஞ்சுரி நேரத்தில் கோலடிக்க, இறுதியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியனாகியது.

போட்டியின் மதிப்பு மிக்க வீரராக இந்திய கேப்டன் வன்லால்பெகாவும், சிறந்த கோல்கீப்பராக இந்தியாவின் சாஹிலும் தோ்வாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.