சதம் விளாசினார்; சாதனைகள் புரிந்தார்!
இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா. ஏற்கெனவே டி20 தொடரையும் இந்தியாவிடம் இழந்த (2-1) இலங்கை, தற்போது ஒரு நாள் தொடரை முற்றிலுமாக பறிகொடுத்து வெறும் கையுடன் நாடு திரும்புகிறது.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இலங்கை 22 ஓவர்களில் 73 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் விராட் கோலி, ஷுப்மன் கில் இருவருமே சதம் விளாசி ரன்கள் குவிக்க, பெüலிங்கில் முகமது சிராஜ் வேகத்தில் முற்றிலுமாகச் சரிந்தது இலங்கை. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை விராட் கோலி வென்றார்.
Advertisement
Advertisement
இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் ஆகியோருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இணைந்திருந்தனர். டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்கள் விளாசி வெளியேற, ஷுப்மன் கில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 116 ரன்கள் அடித்தார். ஒன் டவுனாக வந்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 74-ஆவது சதத்தையும், ஒரு நாள் ஃபார்மட்டில் 46-ஆவது சதத்தையும் பூர்த்தி செய்து இறுதி வரை நிலைத்தார்.
மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயர் 38, கே.எல்.ராகுல் 7, சூர்யகுமார் யாதவ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஓவர்கள் முடிவில் கோலி 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 166, அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பெüலிங்கில் காசன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 2, சமிகா கருணாரத்னே 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் இலங்கை இன்னிங்ஸில் நுவனிது ஃபெர்னாண்டோ 19 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, எஞ்சிய விக்கெட்டுகள் அதற்கும் குறைவான ரன்னில் தகுந்த இடைவெளியில் அடுத்தடுத்து சரிந்தன. இந்திய பெüலிங்கில் முகமது சிராஜ் 4, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.