செய்திகள்

ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பாவுக்கு 538 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!

DIN

ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற விதர்பாவுக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி கடந்த மார்ச் 10 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யஸ் ரத்தோட் 27 ரன்களும், அதர்வா டைடு 23 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, ஷாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 58 ரன்களுடனும், முஷீர் கான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். விதர்பாவைக் காட்டிலும் மும்பை அணி 260 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது மும்பை. ரஹானே மற்றும் முஷீர் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 73 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முஷீர் கான் ஜோடி சேர்ந்தனர்.

முஷீர் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடினார். அவர் 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 111 பந்துகளில் 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தினார். அவர் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் மும்பை அணி 418 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷாம்ஸ் முலானி 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டுகளையும், யஷ் தாக்குர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விதர்பாவுக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டைடு 3 ரன்களுடனும், துருவ் ஷோரே 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா வெற்றி பெற இன்னும் 528 ரன்கள் தேவைப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT