சென்னையில் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: சீருடை, இலச்சினையை அறிமுகம் செய்தாா் பி.வி. சிந்து
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளனத்துடன் (டி.பி.சி.எப்.ஐ.) இணைக்கப்பட்ட தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் (டி.என்.டி.பி.சி.ஏ.) இப்போட்டியை நடத்தவுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் வருகிற அக். 26 முதல் 29 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசியா முழுவதிலும் இருந்து சுமாா் 600 சா்வதேச வீரா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா்.
Advertisement
Advertisement
இலச்சினை, சீருடை அறிமுகம்
போட்டியின் அதிகாரப்பூா்வ இலச்சினை மற்றும் சீருடை அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் உலக பாட்மின்டன் சாம்பியனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி. வி. சிந்து இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: நான் விளையாட்டுத்துறையில் பிரகாசிப்பதற்கு என்னுடைய பெற்றோா் முக்கிய காரணம். என்னுடைய தந்தையும், தாயும் வாலிபால் விளையாட்டில் பிரகாசித்தவா்கள்.
ஒவ்வொரு விளையாட்டையும் வளா்த்து அதில் வீரா், வீராங்கனைகளை உருவாக்கி தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் புகழ் சோ்த்து தருவது என்பது சாதாரணமானது இல்லை..
அது போல் இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டிலும் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டோா் இந்திய அளவில் மத்திய அரசுப்பணிகளில் சோ்ந்துள்ளதாக கூறினா். வீரா், வீராங்கனைகள் பலரை உருவாக்கி அவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர நாடு முழுவதிலும் பல போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
விழாவில் கே.சி.ஜி. கல்லூரி சோ்மன் ஆன்னி ஜேகப், இந்திய டென்னிஸ் பந்து சம்மேளன நிா்வாகிகள், தமிழக டென்னிஸ் பந்து சங்க தலைவா் ஜாவித் கடாலா, செயலாளா் ஞானவேல், போட்டி அமைப்புகுழு தலைவரும், சா்வதேச வாலிபால் வீரருமான ஏ.சிவராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூா், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) குவைத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
சுவீடன் உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டி
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் - 2026 போட்டியில் வெற்றி பெறும் அணி, சுவீடனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். இது ஆசிய அணிகளுக்கு உலக அரங்கில் தடம் பதிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஆசிய சாம்பியன்ஷிப் (நேபாளம், 2023): இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. தெற்காசிய விளையாட்டுகள் (நேபாளம், 2024): இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.