எழுத்தாளர் மணவை முஸ்தபா நூல்கள் நாட்டுடைமை
சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்ப
சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற அவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன.
மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இப்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள நிலையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
மருத்துவச் செலவுக்கு பயன்படும் வகையில், தமது படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, சிறப்பு நிகழ்வாகக் கருதி மணவை முஸ்தபாவின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு ரூ.10 லட்சம் பரிவுத் தொகை வழங்க முதல்வர் கருணாநிதி புதன்கிழமை உத்தரவிட்டார்.