ரயில் உண்டு: பயணிகள் உண்டு பாதுகாப்புதான் இல்லை ?
புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால்,
புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், அதற்கேற்ற வசதிகளைச் செய்வதில் இங்குள்ள ரயில் நிலைய நிர்வாகம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதுதான் மிகப் பெரும் குறை.
புதுச்சேரியிலிருந்து சென்னை, விழுப்புரம், புதுதில்லி, கொல்கத்தா ஹெüரா, திருப்பதி, மங்களூர், புவனேஸ்வர், பெங்களூர் யஷ்வந்த்பூர் ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே ஊர்களில் இருந்து ரயில்கள் புதுச்சேரி வந்து சேர்கின்றன. இதன்படி சுமார் 22 ரயில்கள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றன. இதில், பாசஞ்சர், பாஸ்ட் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உண்டு. சராசரியாக இவற்றின் மூலம் தினசரி 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். ஆனால், 24 பெட்டிகள் கொண்ட ரயிலை நிறுத்த போதிய நீளத்தில் நடைமேடை இல்லை. 19 பெட்டிகளைக் கொண்ட ரயிலுக்கான நடைமேடை மட்டுமே உள்ளது. இதனால், நடைமேடைக்கு வெளியே நிற்கும் முன்பதிவற்ற, பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
Advertisement
முதல் நடைமேடையில் மட்டும் கழிப்பறை, தண்ணீர் நிரப்பும் வசதிகள் உண்டு. நடைமேடை 2, 3 மற்றும் 4-ல் நடைமேடை நீளத்துக்கு மேற்கூரை கூட கிடையாது. மழையோ, வெயிலோ மக்கள் திறந்த வெளியில் நிற்க வேண்டிய சூழல் இருக்கிறது. கடந்த டிசம்பரில் தானே புயலில் இந்த ரயில் நிலையம் சந்தித்த சேதத்தில் பாதி இன்னமும் சரி செய்யப்படாமல் இருக்கிறது.
பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. ரயில் நிலையத்தை அடைய பஸ் வசதி கிடையாது. ஆட்டோவில் மட்டுமே சென்று சேரக்கூடிய நிலை இருக்கிறது. பஸ்களை ரயில் நிலையம் வழியாகவோ, அதன் அருகே செல்லக்கூடிய வகையிலோ பஸ்களை இயக்கக் கோரி, புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கைவிடுக்க ரயில்வே நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற புகாரை பயணிகள் முன்வைக்கின்றனர். இதனால், பேருந்து கட்டணத்தைவிட, ரயிலில் கட்டணம் குறைவாக இருப்பதைப் பயன்படுத்த முடியாத சூழலில் புதுச்சேரி மக்கள் உள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் நிலையம்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கினால், அதன் முன்புற வாயிலில் மட்டுமே வெளியேற முடியுமென்ற நிலை இங்கு இல்லை. அதன் எந்த வழியிலும் வெளியேறும் அளவுக்கு ரயில் நிலையம் திறந்து கிடக்கிறது. இதனால், சமூக விரோதச் செயல்களுக்கு இந்த ரயில் நிலையம் பெரிதும் துணைபோகிறது. அரிசி கடத்தல், மதுபானங்கள் கடத்தல் என அனைத்துக்கும் இந்த ரயில் நிலையம் துணைபோகிறது. தகவல் தெரிந்து வருவாய்த்துறையினர் உள்ளே நுழைந்தால் மட்டுமே அரிசி மூட்டைகளைத் தடுக்க முடிகிறது. அதிலும், மதுபான சோதனை என்பது நடைபெறுவதே இல்லை என்றும் பொது நல அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
அச்சத்தில் பெண்கள்
இதனால், ரயில் நிலைய நடைமேடையிலேயே ரெüடிகள் தங்கியிருப்பதும், அதை ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்கள் கூட கண்டுகொள்வதில்லை என்றும், மது அருந்திவிட்டு தொல்லைகள் தருவோரால் ரயில் நிலையம் வரும் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதை ரயில்வே பணியாளர்களோ, போலீஸôரோ கண்டுகொள்வதில்லை என்றும் பாதிக்கப்பட்ட பயணிகள் புகார் கூறுகின்றனர்.
கூடுதல் ரயில்
இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து மும்பைக்கு செவ்வாய்க்கிழமை மாலை புதிய ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதன் மூலம் ரயில் நிலையத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், புதுச்சேரி ரயில் நிலைய அதிகாரிகளின் நிர்வாகம் இப்படி இருக்கும்போது, கூடுதல் ரயில்கள் விடுவதால், பயணிகளுக்கு நன்மையைவிட, பாதிப்புகளையே அதிகாரிகள் அதிகம் உருவாக்குகின்றனர் என்று ரயில் பயணிகள் குற்றம்சாட்டினர்.