பி.இ.: மூன்றாம் கட்ட இடங்கள் தேர்வு நிறைவு: இதுவரை 7 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை கைவிட்டனர்
பி.இ. மூன்றாம் கட்ட ஆன்-லைன் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 18,354 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பி.இ. மூன்றாம் கட்ட ஆன்-லைன் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் 18,354 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் 5 கட்டங்களாக நடத்துகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்க 10,734 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 6,768 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவர்களில் 3 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தனர்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்க 18,513 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 12,206 பேருக்கு மட்டும் இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் 4 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்தனர்.
மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 25,710 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 19,338 பேரில் 18,534 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். அவர்களில் 18,354 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு வியாழக்கிழமை இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.