FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக  சன் டிவிக்குப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது சென்னை சிபிஐ

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:


சென்னை:  பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக  சன் டிவிக்குப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக...: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,  தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி  இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
விடுவிப்பு: இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன்,  தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி,  தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் கெளதமன்,  சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
மேல் முறையீட்டு மனு: இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
மீண்டும் விசாரிக்க உத்தரவு:  இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,  இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து  சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க கடந்த ஜூலை 25-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், வழக்கின் தொடக்க நிலையிலேயே தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது.
அரசுக்கு இழப்பு: கடந்த 2004 -ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2007-ஆம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, பொது ஊழியர் என்ற நிலையை மீறி இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டு, தன்னுடைய சென்னை மற்றும் தில்லி இல்லங்களுக்கு 764 தொலைபேசி எண்களைப் பெற்றுள்ளார். விதிமுறைகளை மீறிய இந்தச் செயலால் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவில் குறிப்பிட்டார்.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த உத்தரவை எதிர்த்து மாறன் சகோதரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு: இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராகவும், குற்றச்சாட்டுப் பதிவுக்காகவும் ஒத்திவைத்திருந்தது.  இந்த நிலையில் வழக்கு நீதிபதி ஆர்.வசந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
7 பேரும் ஆஜர்: வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு திவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments