அடையாறு புற்றுநோய் மையத்தில் மூலக்கூறு ஆய்வகம் தொடக்கம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மூலக்கூறு ஆய்வகம் நாட்டிலேயே முதன்முறையாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மூலக்கூறு ஆய்வகம் நாட்டிலேயே முதன்முறையாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தின் மூலம் கிருமித் தொற்றை முதலிலேயே கண்டறிந்து புற்றுநோயைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஷ் டயக்னாஸ்டிக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி. சாந்தா, ரோஷ் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மேலாண் இயக்குநர் டாக்டர் ஷ்ரவண் சுப்பிரமணியம், சென்னை பெட்ரோலியக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்என் பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில், டாக்டர் சாந்தா பேசியதாவது:
கருப்பை வாய்ப் புற்றுநோயை எளிதில் தடுக்க முடியும். தடுப்பூசிகள், திறம்பட்ட சோதனை நடைமுறைகள், தொடக்க நிலையிலேயே நோயை கண்டறிதல் ஆகியவை மூலமாக அதைக் குணப்படுத்த முடியும். இறப்புகளைத் தடுக்க இயலும்.
தற்போதைய சூழலில், இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய திறம்பட்ட பரிசோதனை நடைமுறைகள் குறைவாக உள்ள காரணத்தால் அதிக உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.