அண்ணா பல்கலை. வினாத்தாள் வெளியான வழக்கு: இருவர் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிதத் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிதத் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.வெங்கடேசன், சிபிசிஐடி அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த 7-ஆம் தேதி நடைபெற விருந்த கணிதத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டிருந்த வினாத் தாள் முன்னரே வெளியாகி விட்டதாகவும், காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்த முன்னாள் மாணவர் கி.சுரேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படிக்கும் அ.ஹரிகிருஷ்ணன் ஆகியோர்தான் வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாரும், ஹரிகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருந்த கணிதத் தேர்வுக்கு தயாராகி வந்த ஹரிகிருஷ்ணன், சுரேஷ்குமாரிடம் கணிதத் தேர்வு வினாத்தாளை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் அவரது உறவினர் மூலம் பெற்றுத் தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து சுரேஷ்குமார், தேர்வு நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பே தனது உறவினர் மூலம் கணிதத் தேர்வு வினாத்தாளை பெற்று ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.