ஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப் பதியலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
இப்பிரச்சினையில் சென்னையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் பாராதிராஜா பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் "விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தால் நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்; வைரமுத்துவுக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், அதற்காக தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்" என்றும் பேசினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில், அதன் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களுக்குப் பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே வைரமுத்து மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, வி.ஜி.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.
அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கினை முடித்து வைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.