ரூ.2.50 கோடி கேட்டு கத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்
கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ரூ.2.50 கோடி கேட்டு 15 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளது குறித்து போலீஸார் விசாரித்து
கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ரூ.2.50 கோடி கேட்டு 15 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கோ பிடல் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது அலுவலகம் காட்டூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் அவரது அலுவலகத்துக்கு இரண்டு காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அலுவலகத்தில் இருந்த பெண்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர் ஜான் கோ பிடலின் அலுவலக அறைக்குள் நுழைந்த கும்பல் அவரிடம் ரூ.2.50 கோடி பணம் கேட்டு கத்தி முனையில் அவரை மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் அந்த கும்பல் அவரை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டூர் போலீஸார், அலுவலகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொழிலதிபர் ஜான் கோ பிடலுக்கும், சிலருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தொழிலதிபர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளதும் தெரியவந்தது. கடத்தல் கும்பல் அந்த நிறுவனத்தில் இருந்த கணினி உள்ளிட்ட சில பொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் ரீதியாக கரிகாலன் என்பவருக்கும் ஜானுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்திருப்பதாகவும், அவருடன் வந்த சிலர்தான் ஜானை காரில் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.