FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பசுமை வழிச் சாலை திட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 29 ஜூன் 2018, 2:46 am IST
பகிர்:

சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனுவில், சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி செயல்படுத்தப்பட உள்ளது. அந்த சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாள்களுக்குள் பாதிக்கப்படும் மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஆனால், தற்போது மக்களிடம் எந்தவிதமான கருத்துகளையும் கேட்கவில்லை. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலஆர்ஜித சட்டம் 1984-ஐ மாற்றி மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜித சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 
இந்தச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் உரிய ஆலோசனை நடத்தவும், நிலம் கையகப்படுத்துதல் குறித்து கேள்வி எழுப்பவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தில் உள்ள சட்டப் பிரிவு 105 நியாயமான இழப்பீடு கோரும் உரிமைக்கு எதிரானது. எனவே, அந்தச் சட்டப் பிரிவு 105-ஐ ரத்து செய்வதுடன், சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மக்களின் கருத்துத் தெரிவிக்கும் உரிமைக்கு தடை விதிக்கும் வகையில் உள்ள சட்டப் பிரிவு 105-ஐ ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை நிலத்தின் மதிப்பைவிட 3 முதல் 4 மடங்கு வரை அரசு உயர்த்தி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் ஜூலை 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments