FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காஷ்மீரில் உயிரிழந்த திருமணி செல்வத்தின் உடல் நல்லடக்கம் 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற போது பிரிவினையாளர்கள் கல்வீசி தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் திருமணி செல்வத்தின் உடல் ஆவடி-கரிமேட்டில் உள்ள மயானத்தில் புதன்கிழமை

30 ஜனவரி 2024, 6:30 pm IST
திருமணி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் க.பாண்டியராஜன். அருகில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற போது பிரிவினையாளர்கள் கல்வீசி தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் திருமணி செல்வத்தின் உடல் ஆவடி-கரிமேட்டில் உள்ள மயானத்தில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் க.பாண்டியராஜன், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்ஸாண்டர், ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் திரளாகப் பங்கேற்றனர். 
ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்வேலு. இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான வாகன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, ராஜ்வேலு தனது மனைவி செல்வி, மகள் சங்கீதா மற்றும் 2-ஆவது மகன் திருமணி செல்வம் (26) ஆகியோருடன் சுற்றுலா சென்றார். 
மே 4-ஆம் தேதி ரயில் மூலம் புதுதில்லி சென்ற ராஜ்வேல் குடும்பத்தினர் அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்று, அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்குள்ள குல்மார்க் என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க ராஜ்வேல் குடும்பத்தினர் உள்பட பலரும் பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, புட்காம் மாவட்ட பிரிவினைவாதிகள் இவர்கள் சென்ற பேருந்து மீது கற்களை வீசியுள்ளனர். இதில், ராஜ்வேலுவின் மகன் திருமணி செல்வம் மற்றும் அவரது தாய் செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் திருமணி செல்வம் உயிரிழந்தார். 
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறையினர் உதவியுடன் திருமணி செல்வத்தின் உடல் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இரவு 9 மணி அளவில் பாலவேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 
இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்ஸாண்டர், ஆட்சியர் எ.சுந்தரவல்லி, கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ , ஆவடி வட்டாட்சியர் மதன் உள்ளிட்டோர் நேரில் சென்று திருமணிசெல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
தொடர்ந்து, திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் தமீம் அன்சாரி உள்ளிட்டோர் புதன்கிழமை காலையில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பிற்பகல் 12 மணிக்கு ராஜ்வேலுவின் வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கரிமேட்டில் உள்ள மயானத்தில்12.45 மணிக்கு இறுதிச் சடங்குகளை செய்து திருமணி செல்வத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments