திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்குத் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையும், 9 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.250 வீதம் மொத்தம் ரூ.2,250 மதிப்பிலான ஊன்றுகோல்களும், 50 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.56.400 வீதம் ரூ.28.20 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ஜெயபிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.