முகப்பு
தமிழ்நாடு

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க சாலைகளில் மஞ்சள் நீரைத் தெளிக்கும் மக்கள்

ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க இருந்து மீள இயற்கை கிருமி நாசினியான மஞ்சள் நீரை சாலைகளில் மக்கள் தெளித்தனர்.

Updated On : 26 மார்ச், 2020 at 7:42 PM
மஞ்சள் நீரை தெளிக்கும் மக்கள்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:47 PM

ஈரோடு: ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க இருந்து மீள இயற்கை கிருமி நாசினியான மஞ்சள் நீரை சாலைகளில் மக்கள் தெளித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து செல்கின்றனர்.

ஈரோடு நகரை பொருத்தவரையில்  இதுவரை 3 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகிய ஈரோட்டை சேர்ந்தவர். இவர்கள் 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர். மேலும் ஈரோட்டில் லாரிகள் மூலம் வீதி வீதியாக மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில் பொதுமக்கள் லாரிகளில் கொண்டு வரப்படும் மஞ்சள்நீரை குடங்களில் பிடித்து தங்களது வீடுகளின் முன்பு தெளித்து வருகின்றனர். இடையன்காட்டு வலசு, மேட்டூர் சாலை, பெரியவலசு நால்ரோடு, நேதாஜி நகர், திலகர் வீதி, எம்.ஜி.ஆர்.நகர், சுப்பிரமணிய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. தவிர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகரில் முக்கிய சாலைகள், நிழற்குடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  

ஈரோடு மாநகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர்.  சாலைகள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அதிக அளவில் ஒன்றாகக் கூடவேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.